ஈரோட்டில் ஆசியாவிலேயே மிக உயரமான 39 அடி உயர காலபைரவர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள இராட்டைசுற்றி பாளையத்தில் ஆசியாவிலேயே மிக உயரமான 39 அடி உயர காலபைரவர் சிலையை, நுழைவு வாயிலாக கொண்ட தென்னக காசி பைரவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
இக்கோயிலின் கும்பாபிஷேகத்தையொட்டி வியாழக்கிழமை கிராம சாந்தி நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி தொடங்கியது. அதனை தொடர்ந்து சொர்ணாகர்ஷண பைரவருக்கு நெய் அபிஷேகத்தை பைரவர் பீட ஸ்ரீ விஜய் சுவாமிஜி தொடங்கி வைத்தார். தொடர்ந்து வாஸ்து சாந்தி பிரவேசம் நடைபெற்றது.
இதனையடுத்து நேற்று முன்தினம் கோபூஜை, தனபூஜை, அஸ்த்ர ஹோமம், அக்னி சங்கிரஹனம் தேவதா அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, புன்யாக வாசனை, பஞ்சகவ்யம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணா ஹிதி, தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலாலய கோபுரம், ராஜகோபுரம் மற்றும் பரிவாரம் மூர்த்தி அனைத்திற்கும் கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும் கோபுர சிலைகள் கண் திறத்தல் நிகழ்ச்சியும், மாலையில் பரிவாரங்களுடன் கும்பாபிஷேக கலச தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி அவல்பூந்துறை ஈஸ்வரன் கோயிலில் இருந்து நேற்று நடைபெற்றது.
முன்னதாக ஈஸ்வரன் கோயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீர்த்தங்களுக்கு அபிஷேகம் ஆதாரனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தீர்த்த ஊர்வலத்தில் யானை, குதிரைகள் அணிவகுத்து செல்ல அதற்கு முன்பு பொய்கால் குதிரை ஆட்டம், காவடி ஆட்டம், வானவேடிக்கை என பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேக முதல் கால யாக பூஜை நடைபெற்றது. நேற்று இரண்டாம் காலை யாக பூஜையும், மூன்றாம் காலையாக பூஜையும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று 13ம் தேதி திங்கள் கிழமை காலை நான்காம் கால யாக பூஜையும் திருக்கயிலாய வாத்தியம் ஓதி அவல்பூந்துறை ஸ்வர்ண பைரவர் பீடம் ஸ்ரீ விஜய் சுவாமிஜி ஆசிர்வாதத்துடன் அவல்பூந்துறை ஸ்ரீ செல்வ ரத்தினம் சிவாச்சாரியார் நடத்தினார்.
இந்த கும்பாபிஷேகத்திற்கான நட்சத்திர கலச தீர்த்தாபிஷேகம், பைரவ அலங்கார ஆரத்தி, அர்ச்சனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பைரவருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments